VAITHIKASRI August  2009 வைதிக ஸ்ரீ:

நாற்பது ஸம்ஸ்காரங்களுக்குள் விவாஹம் (திருமணம்) என்பதும் ஒன்று, ஆண் பெண்  இருவருக்கும் மன ஒற்றுமை ஏற்படுத்தி நல்ல ஸந்ததியை ஏற்படுத்துவதே திருமணத்தின் நோக்கமாகும்,

வாக்தா3னம் ச ப்ரதா3னம் ச வரணம் பாணிபீட3னம்

ததா2 ஸப்தபதீ3 சேதி விவாஹ: பஞ்சாங்க3 உச்யதே

என்பதாக 1)வாக்தானம்(நிஸ்சயதார்த்தம்), 2)கன்யா ப்ரதானம், 3) வர ப்ரேஷணம்4)பாணி கிரஹணம் 5) ஸப்தபதீ என்னும் முக்கியமான ஐந்து நிகழ்ச்சிகளைக் கொண்டது விவாஹம், தற்சமயம் நமது ஸமூஹத்தில் விவாஹம் இவ்விதம்தான் நடத்தப்படுகிறது என்றாலும், வாக்தானம் (நிஸ்சயதார்த்தம்) என்பது மட்டும் விவாஹத்துக்கு சில மாதங்களுக்கு (நாட்களுக்கு) முன்னால் ஒருமுறையும் விவாஹத்துக்கு முன்நாள்மாலை ஒருமுறையும் என ஒரே நிகழ்ச்சி இருமுறை நடத்தப்படுகிறது

இவ்வாறு நிஸ்சயதார்த்தத்தை இரண்டு முறை நடத்தத்தேவையில்லை, சாஸ்திரங்களில் இதை இரண்டுமுறை நடத்துமாறு கூறவில்லை, விவாஹத்துக்கு முன் நாள் மாலை ஒருமுறை மட்டும் நடத்தினாலே போதும், இதனால் வீணான (மண்டபம்சாப்பாட்டு போக்குவரத்து  ஏற்பாட்டு) சிலவுகளைத் தவிர்க்கலாம், சிக்கனமாகத் திருமணத்தை நடத்தவேண்டிய நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் திரவியத்தை வீண் சிலவு செய்யலாமா? ,யோசிக்க வேண்டும்,

மேலும் பல மாதங்களுக்கு முன்பு செய்யப்படும் நிஸ்சயதார்தத் துக்கும் விவாஹத்துக்கும் இடைபட்ட நாட்களில் பெண்ணின் பையனின் பெற்றோர் ச்ராத்தம் தர்ப்பணம் செய்தல், தீட்டுக் காத்தல், இறந்த வீட்டுக்குச் செல்லுதல், போன்றவற்றிலும், நிஸ்சயதார்த்தம் செய்யப்பட்டு நின்றுபோய் விட்ட விவாஹத்துக்கு பரிஹாரங்களைத் தீர்மானிப்பதிலும் பல சாஸ்திர ஸங்கடங்கள் ஏற்படுகின்றன,

ஸக்ருத் ஆஹ ததாமீதி பெரியோர்கள் வாக்கிலிருந்து  ததாமி (தருகிறேன்) என்னும் சொல் ஒருமுறைதான் வரும் உடனே அது செயல்படுத்தப்படும் என்கிறது நீதி வாக்கியம்

 ஆகவே விவாஹ (திருமண) நிகழ்ச்சிகளில் நாமாக தற்காலத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் வேண்டாத பல நிகழ்ச்சிகளை, குறிப்பாக இருமுறை நிஸ்சயதார்த்தம் என்பதை தவிர்க்க முயற்சிக்கலாம், வீணான சிலவுகளைத்தவிர்த்துபெரியோர்களின் ஆசி பெற்று மந்திரங்களை சிரத்தையுடன் சொல்லி  விவாஹம் ந்டைபெற ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும்.

Back